அதிரை டுடே:மே.04
திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கின் போது நள்ளிரவில் இஸ்லாமியர்கள் 700 பேர் திரண்டு சாலைகளில் தொழுகையில் ஈடுபட்டு வருவதாக 60 வயதான ரவீந்திரன் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் படங்களைப் பதிவிட்டிருந்தார்.
அந்தப் படங்களைப் பார்த்த பலர் சந்தேகப்பட்டு ட்விட்டரில் திருப்பத்துார் மாவட்ட காவல்துறையை டேக் செய்து நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டனர்.
இந்தத் தகவல் திருப்பத்துார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் கவனத்திற்கு சென்றது. ட்விட்டரில் பகிரப்பட்ட படங்கள் பற்றி போலீசார் விசாரித்தபோது அவை 2018ம் ஆண்டு, உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் எடுக்கப்பட்டவை என்பது தெரியவந்தது.
இதையடுத்து படங்களைப் பகிர்ந்த 60 வயதான ரவீந்திரன் மீது வழக்குப் பதிவு செய்தனர் போலீசார். ரவீந்திரனின் ட்விட்டர் பக்கத்தில் இருந்து அந்தப் படங்கள் அகற்றப்பட்டதோடு அவரும் கைது செய்யப்பட்டார்.
மேலும், கொரோனா ஊரடங்கின் போது இதுபோன்ற வதந்தி பரப்பும் படங்களைப் பகிர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் திருப்பத்துார் மாவட்ட காவல்துறையின் ட்விட்டர் பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கில் பெரும்பாலானோர் சமூக வலைதளங்களை அதிகளவில் பயன்படுத்துவதால் சமூகப் பொறுப்புணர்வு தேவை என மாவட்ட எஸ்பி விஜயகுமார் அறிவுறுத்தியுள்ளார்.
சமூக வலைதளங்களில் பொய்யான செய்திகளை பரப்புவோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்படுவார்கள் என, எஸ்பி விஜயகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்
சமூக வலைதளங்களில் பரவும் எந்த செய்தியையும் அதன் உண்மைத் தன்மையை உறுதி செய்யாமல் பரப்புவது சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதாகும் என்பதால், செய்திகளைப் பகிர்வதற்கு முன் பலமுறை உறுதி செய்து கொள்ள வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
0 Comments