SDPI தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.


அதிரை டுடே:மே.07
டெல்லியில் உள்ள தப்லீக் ஜமாத்தினரை மீட்டுவர தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மே 12ல் எழுத்துப் பூர்வமான அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதி மன்றம் உத்தரவு

டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை உடனடியாக மீட்க வேண்டும். இடைக்கால நிவாரணமாக டெல்லியில் முறையான அடிப்படை வசதியில்லாமல் தவித்துவரும் 500க்கும் மேற்பட்ட தமிழகத்தை சேர்ந்த தப்லீக் ஜமாத்தினரை தமிழகத்திற்கு அழைத்துவர தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அச.உமர் பாரூக் சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் அஜ்மல் கான் அவர்களும் அவருக்கு உதவியாக வழக்கறிஞர் ராஜா முகமது அவர்களும் மனுதாரர் சார்பாக ஆஜராகி வாதாடினர்.

முன்னதாக கடந்த ஏப்.28 அன்று நீதியரசர்கள் சத்யநாராயணன், நிர்மல் குமார் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணை நடைபெற்றது.
அப்போது, டெல்லியில் உள்ள தப்லீக் ஜமாத்தினரை மீட்பதில் மாநில அரசுக்கே அதற்கான தார்மீக பொறுப்பு உள்ளதை மனுதாரர் வழக்கறிஞர்கள் சுட்டிக்காட்டி வாதிட்டனர். வாதத்தை தொடர்ந்து வழக்கு விசாரணையை இன்று (மே.07) ஒத்திவைத்தனர்.

இந்நிலையில் இன்று இந்த வழக்கு நீதியரசர்கள் வினித் கோத்தாரி, புஷ்பா சத்யநாராயணன் அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசு வழக்கறிஞர் தங்கள் மாநிலங்களில் சிக்கியுள்ள வெளி மாநிலத்தவர்களை சொந்த ஊர்களுக்கு அழைத்துச் செல்வது தொடர்பாக மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு வழிகாட்டுதல்களுடன் அனுமதி அளித்துள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து மாநில அரசு வழக்கறிஞர் இதுதொடர்பாக சிறப்பு அதிகாரி மற்றும் மாநிலம் வாரியாக தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இணையதளங்கள் துவங்கப்பட்டு அதன் மூலமும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், இந்த நடவடிக்கைகள் மத்திய அரசின் வழிகாட்டுதல் படி நடைபெறுவதாகவும், டெல்லியில் உள்ள தப்லீக் ஜமாத்தினர் போல் நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து மனுதாரர் சார்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் அஜ்மல் கான் அவர்கள், மத்திய அரசின் வழிகாட்டுதல் என்பது கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அவர்களுக்கு தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்திய பின்னர் அழைத்துச் செல்வதாகும். மத்திய அரசின் இந்த வழிகாட்டுதல் பிரகாரம் அனைத்து பரிசோதனைகளும் முடிவடைந்த நிலையில் தான் தப்லீக் ஜமாத்தினர் முகாம்களில் உள்ளனர். மேலும், அரசு அவர்களை செலவு செய்து அழைத்து வருவதற்கான தார்மீக பொறுப்பை தட்டிக்கழித்தால், தமிழகம் திரும்ப ஆகும் செலவை அவர்கள் ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். அதற்கான பிரமானப் பத்திரத்தை தாக்கல் செய்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், மனுதாரர் சார்பில் சிறப்பு ரயில்கள் மூலம் அவர்களை அழைத்து வருவதற்கான கோரிக்கையை தமிழக அரசின் சிறப்பு அதிகாரியிடம் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார். ஆகவே, மாநில அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் இவர்களுக்கு முன்னுரிமை அளிக்க அனைத்து விதமான முகாந்திரங்கள் இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மனுதாரர் குறிப்பிட்டுக்காட்டும் டெல்லியில் உள்ள தப்லீக் அமைப்பினர் அனைத்து விதமான சோதனைகளையும் மேற்கொண்டு, அவர்கள் தமிழகம் வருவதற்கு கூட அனைத்து விதமான போக்குவரத்து செலவுகளையும் ஏற்றுக்கொள்ள அவர்கள் தயாராக உள்ளதால், தமிழக அரசு அவர்களை விரைவாக மீட்டுக் கொண்டுவருவதற்கான என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது என எழுத்துப்பூர்வமாக மே 12 அன்று தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

Post a Comment

0 Comments

'/>