அதிரை டுடே:மார்.15
ஏப்ரல் மாதத்தில் விற்பனைக்கு வரும் ராயல் என்ஃபீல்டு 250 சிசி பைக்..! இந்தியாவின் மிட்-வெயிட் மோட்டார் சைக்கிள் விற்பனையில் கொடிகட்டி பறக்கும் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் விரைவில் 250சிசி இழுவைத் திறன் கொண்ட பைக் மாடலை விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது.
மிட்-வெயிட் மோட்டார் சைக்கிள் பிரிவில் நாட்டின் முதன்மையான வாகனமாக திகழ்வது ராயல் என்ஃபீல்டு. சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்நிறுவனம் இப்பிரிவில் வலுவான சந்தை மதிப்பை பெற்றுள்ளன. நடுத்தர எடைக்கொண்ட மோட்டார் சைக்கிள் பிரிவில் ஜாவா, பெனெல்லி, ஹோண்டா போன்ற பல்வேறு நிறுவனங்கள் தொடர்ந்து இயங்கி வந்தாலும், ராயல் என்ஃபீல்டு ஆதிக்கம் தான் பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. வலுவான கட்டமைப்பு, சிறப்பான ஆற்றல் வெளிப்படுத்தும் அம்சங்கள், மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப கட்டமைப்புகள் போன்றவை இதற்கு வலு சேர்க்கின்றன. எனினும், இந்த பிரிவில் போட்டியில்லாமல் இல்லை.
மிட்-வெயிட் மோட்டார் சைக்கிள் பிரிவில் தக்க வைத்துக் கொள்ளும் பொருட்டு ராயல் என்ஃபீல்டு நிறுவனம் விற்பனையை அதிகரிப்பதற்கான திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் மலிவு விலை மோட்டார்சைக்கிளில் J1D மாடல் வரும் ஏப்ரல் மாத இறுதியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என பல்வேறு ஆட்டோமொபைல் செய்தி ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இந்த பைக்கிற்கு ஹன்ட்டர், ஷெர்பா, ஃபிளையிங் ஃப்ளீ மற்றும் ரோட்ஸ்டெர் ஆகிய நான்கு பெயர்களில் ஒன்றை தேர்வு செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நான்கு பெயர்களையும் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் பதிவு செய்துள்ளது. இந்தியாவில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் விற்பனை செய்யும் பைக்குகளில் கிளாசிக் 350 மாடலுக்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. இதற்கு இணையான வரவேற்பை பெறும் விதத்தில் இப்புதிய பைக்கை உருவாக்கி வருகிறது ராயல் என்ஃபீல்டு நிறுவனம்.
250சிசி இழுவைத் திறன் கொண்ட இந்த புதிய பைக்கிற்கு ரூ. 1.50 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு பஜாஜ் டோமினார் 250 மாடல் சரி நிகர் போட்டியாக அமையும்.

0 Comments