சென்னை மீனம்பாக்கத்தில் சர்வதேச விமான நிலையத்தில் 8 அதிநவீன சோதனை கருவிகள்

அதிரை டுடே.ஜன 05
சென்னை மீனம்பாக்கத்தில் சர்வதேச விமான நிலையத்தில் 8 அதிநவீன சோதனை கருவிகள்

ஒரு மணி நேரத்தில் 1800 பெட்டிகளை சோதனையிடலாம்
சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள சர்வசேத விமான நிலையத்தில் பயணிகளின் உடைமைகளை விரைவாகச் சோதனை செய்யும் வகையில் ரூ. 58 கோடி மதிப்பில் 8 அதிநவீன கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான முனையங்கள் இயங்கி வருகின்றன. இதில், பயணிகளின் உடைமைகளைச் சோதனை செய்து விரைவாகப் பெற்றுக் கொள்ளும் வகையில் சர்வதேச விமான நிலையத்தில் 4, உள்நாட்டு விமான முனையத்தில் 4 என மொத்தம் 8 சிடிஎக்ஸ் எனப்படும் அதிநவீன சோதனைக் கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து சென்னை விமான நிலைய தகவல் தொடர்புத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–


சென்னை விமான நிலையத்தில் ஈடிஎஸ் எனப்படும் சோதனைக் கருவி மூலம் பயணிகளின் உடைமைகள் சோதனை செய்யப்படுகின்றன. இந்தக் கருவியைவிட வேகமாக உடைமைகளைச் சோதனையிடும் வகையில், ரூ. 58 கோடி மதிப்பில் 8 சிடிஎக்ஸ் எனப்படும் அதிநவீன சோதனைக் கருவிகள் விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தக் கருவி மூலம், ஒரு மணி நேரத்தில் 1,800 பெட்டிகள் என ஒரு வாரத்தில் சுமார் 75,000 பெட்டிகளைச் சோதனையிட முடியும். இந்தக் கருவி தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது. உள்நாட்டு விமான முனையத்தில் முதன்முறையாக அமைக்கப்பட்டுள்ள இக்கருவிக்கு உள்நாட்டு விமானப் பாதுகாப்பு ஒழுங்கு முறை அமைப்பின் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

'/>